Sunday 18 January 2015

ஏன் இந்த அலட்சியம் கேட்பீர்களா ?

இந்தியர்கள்  திறமையானவர்கள், அறிவாளிகள், அவர்களால் முடியாதது என்று ஒன்றும் இல்லை. பிறகு ஏன் இந்தியா வளரும் நாடுகளின் பட்டியலிலே பல ஆண்டுகளாக உள்ளது  என்று எல்லார்  மனதிலும்  சந்தேகம் எழும் அல்லவா? அதற்கான விடை இதோ நம்மவர்கள் பலரும் வெளிநாடுகளில் வேலை என்றவுடன் மூட்டை முடுச்சுகளை கட்டி கொண்டு கிளம்பி விடுகிறார்கள். வெளிநாட்டினரும் நம்மவர்களை நன்கு பயன் படுத்தி கொள்கிறார்கள் என்பதும் அதிர்ச்சியான தகவல். நம்மவர்களுக்கு வெளிநாட்டில் வேலை என்றால் பெருமைதானே என்று நீங்கள் கேட்கலாம்? பெருமை தான் ஆனால் அது இந்தியாவிற்கு ஒரு பெரும் இழப்பு, எப்படி என்று கேள்வி எழுகிறதா? அதற்கும் விடை இங்கே உங்களுக்கு புரியும் வண்ணம் கூற வேண்டுமானால் "ஒரு மகன் தன் சம்பளத்தை தாயிடம் அளிக்காமல் அவனின் மாமியாரிடம் அளித்தால் அந்த தாயின் இழப்பு என்னவோ?" அது தான் நம் இந்திய தாய் நாட்டிற்கான இழப்பும்  என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். அந்த தாய்  எப்படி தன் மகன் சம்பாதிக்கிறான் என்று பெருமை கொள்கிறாளோ  அது போல தான்  அவர்களின் தாய்  நாட்டை சார்ந்த  நாம்(சகோதர,சகோதரிகளாக) பெருமைபட்டு கொள்கிறோம் என்பது மறுக்க முடியாத நிதர்சனமான உண்மை. இதனால் அந்த தாய்  எந்த பயனும் அடைவது இல்லையோ அது போல நம் இந்திய திரு நாடும் எந்த வளர்ச்சியும்/பயனும் அடைவது இல்லை. எனவே தான் நாம் வளரும் நாடாகவே இருக்கிறோம். பிறகு ஏன் அவர்கள்  இந்தியாவில் வேலை செய்யவில்லை என்ற கேள்வி எழும் அல்லவா? அதற்கும் விடை இங்கே  நம்மவர்களுக்கான எந்த நவீன வசதியையும்/வாய்ப்புகளையும்  இந்திய அரசாங்கம்  ஏற்படுத்தி தரவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.  அதனால் தான்  மாமியார் ஏற்படுத்தி கொடுத்த வசதிக்கும்/வாய்ப்பிற்கும் மருமகன் நன்றி சொல்கிறான். ஏன் இந்தியாவில் வசதிகளும்/வாய்ப்புகளும் இல்லையா?  இல்லை என்றால் ஏன் இல்லை என்று மனம் கொந்தளிகிறதா? உண்மையில் இந்தியாவில் சில வசதிகளை தவிர அனைத்து வசதிகளும் உள்ளன. ஆனால் வாய்ப்பு? என்ன ஆனால்? என்று கேட்கிறீர்களா?வாய்ப்புகளை ஊழல் நிறைந்த அரசியலாலும், தன் நாட்டை தாய் நாடு என்று கருதாத அரசியல்வாதிகளாலும், குடிமக்களை சகோதரர்களாகவும், சகோதரிகளாகவும்  மதிக்காத பொறுப்பற்ற அதிகாரிகளாலும் தான் அந்த வாய்ப்புகள் உரியவரிடம் சென்றடையவில்லை. ஏன் இந்த ஊழலும், அலட்சியமும் நம் நாட்டை பற்றிக் கொண்டு உள்ளன என்று கேள்வியினை கேட்க மனம் துடிக்கிறதா? அதை நீங்கள் ஓட்டு போட்டு  தேர்வு செய்த  மக்கள் பிரதிநிதிகளிடமும், மக்கள் அதிகாரிகளிடமும் தான் நாம் கேட்க வேண்டும். கேட்பீர்களா ????????????????????????????????    



இந்தியர்களுக்கான மவுசு !

இன்றைய இளைஞர்களின்  முக்கிய கனவுகளில் ஒன்று படித்து முடித்தவுடன் வெளிநாட்டில் வேலைக்கு சென்று விட வேண்டும் என்பது தான். அதே போல வெளிநாட்டு நிறுவனங்களும் அதிகம் இந்திய  இளைஞர்களை தான்  விரும்புகிறார்கள். சமீபத்தில் வேலை இல்லா திண்டாட்டம் வளர்ந்த  வல்லரசு நாடான  அமெரிக்கா உட்பட பல உலக நாடுகளில் தலை தூக்கி அவர்களுக்கு தலை வலியை ஏற்படுத்தியது. சில நாட்டு அரசாங்கங்கள் கடுமையான சீர்திருத்தங்களை கொண்டு வந்தன. அதில் அமெரிக்கா  அரசு இந்திய இளைஞர்களை கண்டு நடுங்கியது. அதனால் அவர்கள் தம் நாட்டு இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் வண்ணம்   நிறுவனங்களுக்கு கடும் உத்தரவுகளை பிறப்பித்தது. இந்தியர்களின்  திறமையை உணர்ந்து இருந்த மைக்ரோசாப்ட் நிறுவனர்      பில் கேட்ஸ் அவர்கள் ஒரு முறை தன் பேட்டியில் "அமெரிக்காவில் இந்தியர்களை தடை செய்தால்  என் நிறுவனத்தையே இந்தியாவிற்கு  மாற்றி விடுவேன் என்று கூறியுள்ளார் ". இதன் மூலம் நம் இந்தியர்களின் மவுசினை அறிந்து கொள்ளலாம். இதற்கு காரணம் தான் என்ன?  அதீத திறமையும், குறைந்த சம்பளமும் தான். எடுத்து காட்டாக மின்னஞ்சலினை கண்டறிந்தவர் வெளிநாடு வாழ் இந்தியர் (தமிழர் )  சிவா அய்யாதுரை , நோபல் பரிசு வென்ற வேதியல் அறிஞர்  வெளிநாடு வாழ் இந்தியர் (தமிழர் ) வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன். என்று நவீன உலகம் போற்றிடும் அறிஞர்கள் பலர் இந்தியாவில் பிறந்து வளர்ந்தவர்களே! மேலும் நம்மவர்களின்  அறிவார்ந்த செயல்களால் தான் பல்வேறு நிறுவனங்கள் வளர்ச்சி அடைந்து/ அடைந்து கொண்டு /அடைய இருக்கின்றன என்பது இந்தியர்களின் திறமையை வெளிச்சமிட்டு காட்டி உள்ளது.